Monday, June 15, 2009

Richard Feynman


Richard Feynman
The famous Tamil writer S.Ramakrishnan in his blog
http://www.sramakrishnan.com/ has written the following article about Richard Feynman. With due respect, I acknowledge with thanks for referring the article. Richard Feynman is a theoretical Physicist and I am wondering how a Tamil writer is able to appreciate a Physicist. It should be because of the book about Richard Feynman “Surely you are joking Mr.Feynman” and the short film on the biography of Feynman, “infinity”. If you are interested in Tamil writing, please do visit S.Ramakrishnan’s blog. With kind regards.

ரிச்சர்ட்பெயின்மென அறிவியலில் உயர் ஆய்வு செய்யும் நண்பர் ஒருவரை தற்செயலாகச் சந்தித்தேன். சேர்ந்து காபி குடிக்க சென்றோம். வழியில் பேசிக் கொண்டிருந்த போது ரிச்சர்டு பெயின்மெனை (Richard P. Feynman ) எனக்கு பிடிக்கும். அவரை விரும்பி படித்திருக்கிறேன் என்று சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. வியப்புடன் நீங்கள் பெயின்மெனை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்.எழுத்தாளர்களுக்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார். நானும் அந்த இடைவெளி அப்படியே தானிருக்கிறது. எனக்கும் பெயின்மேனின் இயற்பியல் உயர்தத்துவங்கள் பற்றி எதுவும் தெரியாது. நான் வாசித்திருப்பது அவரது கட்டுரைகளை. அதுவும் சுயசரிதைக் கட்டுரைகளை , குறிப்பாக . Surely You're Joking, Mr. Feynman! What Do You Care What Other People Think? : என்ற புத்தகங்களை பலமுறை வாசித்திருக்கிறேன். மிக அற்புதமான எழுத்து அவருடையது. படிக்க சுவாரஸ்யமும் உள்ளார்ந்த கேலியும் கொண்டிருக்கும். நண்பரின் மானசீக குரு பெயின்மென் தான் என்பது அவர் பேசப்பேச புரிந்தது. அவரே சொன்னார் நான் மட்டுமில்லை.

ஐஐடி மற்றும் ஐஐஎஸ் வட்டாரத்தில் பெயின்மென் மீது ஆதர்சம் கொள்ளாதவர்கள் குறைவு. அவர் ஒரு மேதை , நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்று புகழ்ந்து கொண்டேயிருந்தார். 1965ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்ட் பெயின்மென். அமெரிக்காவின் அணுஆய்வு சோதனையில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். இயற்பியல் ஆய்வுகள் குறித்து நிறைய உரைகள் நிகழ்த்தியிருக்கிறார். நான் பெயின்மென் பற்றிய எவ்விதமான அறிமுகம் இன்றி அவரது புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அதிலும் குறிப்பாக யூ ஆர் ஜோக்கிங் மிஸ்டர் பெயின்மெனை படித்த போது அவரது இயற்பியல் சாதனைகள் எதையும் அறிந்திருக்கவில்லை. அந்தப் புத்தகம் விஞ்ஞானி ஒருவர் சொந்த வாழ்வில் மேற்கொண்ட சாகசங்கள், சண்டைகள், ஆர்வங்கள் மற்றும் கிறுக்குதனங்கள் பற்றியது. குறிப்பாக பெயின்மெனுக்கு பூட்டை திறப்பது என்றால் ரொம்பவும் பிடிக்கும். எந்த பூட்டையும் அவர் கண்ணில் பார்த்த மாத்திரத்தில் அது என்னவகையான பூட்டு அதை எப்படி திறப்பது என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார். எவ்வளவு சிக்கலாக வடிவமைக்கபட்ட பூட்டையும் அவரால் திறந்துவிட முடியும். அப்படியொரு முறை அவர் அமெரிக்க அணுஆய்வு திட்டத்தில் பணியாற்றிய போது அங்கே என்ன நடக்கிறது என்பதை பற்றிய முக்கிய ஆவணங்களை ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பாக ஒரு பெட்டகத்தில் வைத்து பூட்டி விட்டு சென்றிருந்தார்கள். பெயின்மென் அந்த பூட்டை திறந்து அதிலிந்த தகவல்களை தன் விட்டிற்கு எடுத்துபோய் படிக்க ஆரம்பித்தார். எங்கே அவர்கள் தேடுவார்களோ என்று நினைத்து அதே பாதுகாப்பு பெட்டகத்தில் தனது அடையாள அட்டையை வைத்துவிட்டு வந்துவிட்டார். இதை அவர் விவரிக்கும் அழகிருக்கிறதே அத்தனை நகைக்சுவை.

இது போலவே பெயின்மென் ஒரு மதுவிடுதிக்கு போகிறார். அங்கே துருதுருவென ஏதாவது செய்ய வேண்டும் போலிருக்கிறது. மிதமான போதையை ஏற்றிக் கொண்டு ஒரு மூலையில் அமர்ந்திருந்த ஒரு ஆளின் முன்னால் போய் நின்று அந்த ஆளின் முகத்தில் ஒங்கி ஒரு குத்து குத்திவிட்டு வருகிறார். அந்த ஆள் நிலைகுலைந்து போகிறான். சில நிமிசங்களில் பணியாளர் ஒடி வந்து எதற்காக அந்த ஆளை அடித்தீர்கள் அவன் இப்போது தான் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்திருக்கிறான் என்று சொல்ல பயந்து போன பெயின்மேன் ஏதாவது சொல்லி சமாளி என்று ஒரு ஐம்பது டாலரை அவனிடம் தருகிறார். உடனே பணியாளரும் நீ கதவை நோக்கி நடந்து போகும் போது திரும்பி திரும்பி பார்த்தபடியே போ. மற்றதை நான் பார்த்து கொள்கிறேன் என்கிறான். பெயின்மென் அப்படியே செய்கிறார்அந்த ரௌடியின் அருகில் போய் உன்னை அடித்தவன் இப்போது தான் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வந்திருக்கிறான். வேறு ஒருவன் என்ற நினைத்து அடித்துவிட்டான் என்று காசை தந்து சமாளிக்கிறான். பெயின்மென் அங்கிருந்து தப்பியோடுகிறார். அதன் பிறகு பல ஆண்டுகாலம் அந்த பார் பக்கம் போகவேயில்லை.இன்னொரு சமயம் பிக்பாக்கெட் அடிப்பது மீது ஆசை அதிகமாகி அதை கற்றுக் கொள்வது என்று முடிவு செய்து பிக்பாக்கெட்காரனிடம் உதவியாளராக சேர்ந்து தொழிலை கற்றுக் கொள்கிறார். பேண்ட் வாசிப்பதில் ஆர்வமாகி ஒருஇசைக்குகுழுவில் சேர்ந்து பேண்ட் வாசிக்கிறார். ஒவியம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் உண்டாகி தொடர்ந்து பயிற்சி செய்து நவீன ஒவியராகிறார்.

ஒரு நாள் பெண்களை எப்படி வசீகரிப்பது என்று ஒரு மாணவனிடம் கேட்டதும் அவன் மாலையில் பாருக்கு வாருங்கள் கற்று தருகிறேன் என்கிறான். அவரும் போகிறார். அவன் முதலில் இப்படி டிரஸ் பண்ணினால் எந்த பெண்ணும் உங்களை பார்க்கமாட்டாள் என்று அவரது உடையை கலைத்துவிடுகிறான். பிறகு எந்த பொண்ணை பார்த்தாலும் ஹாய் என்று சொல்லுங்கள். அதிலேயே பிக்அப் ஆகிவிடும். இல்லாவிட்டாலும் கையசைத்தபடியே இருங்கள். யாராவது பதிலுக்கு சிரிப்பார்கள். உடனே அருகில் போய் என்னோடு குடிக்க விருப்பமா என்று கேளுங்கள். வந்துவிடுவார்கள். அப்படியே உங்கள் விசிட்டிங்கார்டை தந்து விரும்பும் போது அறைக்கு வரலாம் தனியாக தான் இருக்கிறேன் என்று சொல்லுங்கள் ,பெண்கள் தானே மயங்கிவிடுவார்கள் என்று ஆலோசனை தருகிறான். அது போலவே பாரில் ஒரு பெண்ணை பார்த்து ஹாய் என்கிறார்.அவளும் ஹாய் என்கிறார். உடனே அவர் குடிக்க அழைக்கிறார். விசிட்டிங்கார்டு தருகிறார். அவளும் வருவதாக ஒத்துக் கொள்கிறார். மாணவனுக்கு நன்றி சொல்ல போகையில் அவன் கோபப்பட்டு நீ பழகுவதற்கு என்னுடைய தங்கை தான் கிடைத்தாளா என்று கத்துகிறான். இப்படி அவரது வாழ்வில் உள்ள சுவாரஸ்யங்களை மிக அழகாக எழுதியிருக்கிறார். பொதுவாக விஞ்ஞானிகள் என்றாலே யாரோடும் பேசாதவர்கள். அறிவுஜீவிகள் என்ற தோற்றமிருக்கிறது. குறிப்பாக அவர்களுக்கும் இசை, இலக்கியம், கலை போன்ற துறைகளுக்கும் எந்த தொடர்புமிருக்காது என்றே பிம்பம் உள்ளது.நான் அறிந்தவரை அது பொய்யானது. விஞ்ஞானிகளை போல ஆழமாக இசையை, இலக்கியத்தை ரசித்தவர்களை கலைஉலகில் கூட கண்டதில்லை. ஐன்ஸ்டீன் தீவிரமான புத்தகவாசிப்பு அனுபவம் கொண்டவர். நல்ல இசை ரசிகர். செவ்வியல் இசை குறித்த அவரது கட்டுரைகள் அற்புதமானவை. குறிப்பாக தஸ்தாயெவ்ஸ்கி பற்றிய அவரது பார்வை மிக சிறப்பானது. அவரே குறிப்பிடுவது போல Dostoevsky gives me more than any scientist, more than Gauss." ."

விஞ்ஞானத்தின்முன்னோடி கருத்துகள் இலக்கியத்தில் பதிவாகி உள்ளன. இந்தியாவை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான சுப்ரமணியம் சந்திரசேகர் பீதோவன், நியூட்டன் மற்றும் ஷேக்ஸ்பியர் மூவரையும் ஒப்பிட்டு அவர்களின் படைப்பு ஆளுமையை Truth and Beauty: Aesthetics and Motivations in Science நூலில் விவரிக்கிறார். மிக சுவாரஸ்யமான புத்தகமது.இது போலவே கார்ல் சாகன் என்ற வானவியல் விஞ்ஞானி எழுதிய பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் வானவியல் விஞ்ஞானத்தின் வரலாறு போன்ற புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அற்புதமான எழுத்து முறை கொண்டவர். இருபதிற்கும் மேலான புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதில் கான்டாக்ட் என்ற நாவல் குறிப்பிடத்தக்கது. அதை ஹாலிவுட்டில் ராபர்ட் ஜமைக்காஸ் படமாக்கியிருக்கிறார்.தற்போதுள்ள விஞ்ஞானிகளில் ரிச்சர்டு டௌகின்ஸ் என்ற பிரிட்டானிய விலங்கியல் விஞ்ஞானி எழுதிய The Selfish Gene, The Blind Watchmaker, போன்ற புத்தகங்கள் வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் எளியது. அத்துடன் ஆழமான கருத்துகளையும் நவபார்வையும் கொண்டதாகும்.

மற்றொருவர் உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகின்ஸ். அவர் எழுதிய A Brief History of Time புத்தகம் காலத்தின் சரித்திரத்தை கூறுகிறது. இதை முழுமையாக ஒருவர் புரிந்து கொண்டுவிட்டால் அவர் டாக்டர் பட்டதற்கு சமமாகிவிடுவார் என்கிறார்கள். அவ்வளவு சிக்கலான விஷயத்தை ஹாகின்ஸ் குழந்தைக்கு சொல்வது போல அத்தனை எளிதாக எழுதியிருக்கிறார். அதிலும் விஞ்ஞானிகளின் புத்தகங்களை ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் போன்ற நிறுவனங்கள் வெளியிடும் போது இவர் ரயில்நிலையங்களில் கூட கிடைக்க கூடிய காமிக்ஸ், மற்றும் ஜனரஞ்சக புத்தகம் வெளியிடும் பாண்டம் பதிப்பகத்தில் தன்னுடைய விஞ்ஞான நூலை வெளியிட்டிருக்கிறார். ஒரு கோடி பிரதிகளுக்கும் மேலாக விற்பனையாகி உள்ளது இந்த புத்தகம். காலம் மற்றும் கருந்துளை குறித்த விரிவான ஆய்விலிருந்து வெளியானதே இந்த நூல். பெயின்மெனின் புத்தகம் அவர் சொல்லி Ralph Leighton எழுதியது. ஐந்து லட்சம் பிரதிகளுக்கும் மேலாக விற்றுள்ள இந்த புத்தகம் பதினாறு மொழிகளில் வெளியாகி உள்ளது. இவை தவிர அவரது முக்கிய புத்தகங்களாக The Pleasure of Finding Things Out , The Feynman Lectures on Physics.. இரண்டையும் குறிப்பிடலாம்.

பெயின்மெனின் மனைவி புற்றுநோயால் மரணமடைந்தார். அதன் பிறகு இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். தனது மகள் மற்றும் வளர்ப்பு மகளுடன் ஊர் சுற்றி மனம் விரும்படியாக வாழ்க்கையை செலவிட்டார் . கம்ப்யூட்டரில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அப்பா மகன் இருவரும் கணினி உலகில் நுழைந்து ஆய்வுமேற்கொண்டார்கள். சலிக்காத பயணங்கள் , நடைமுறை வாழ்வில் சாசகம் செய்வது இதுவே அவரது இயல்பு. அவரை டான்குவிகாத்தே என்று நண்பர்கள் கேலி செய்திருக்கிறார்கள்.அவரையும் புற்றுநோய் தாக்கியது. அறுவை சிகிட்சை செய்து கொண்டார். ஆனாலு அவரது உடல்நலம் முழுமையாக தேறவில்லை. 1988 பிப்ரவரியில் இறந்து போனார். பெயின்மேன் வாழ்க்கையை வேடிக்கையான விளையாட்டாகவே எடுத்துக் கொண்டார். விஞ்ஞானத்தை பயமுறுத்தும் விஷயமாக இல்லாமல் மக்கள் வாழ்வோடு கலந்த ஒன்றாகவே கருதினார்.ஒரு நாள் பெயின்மென் நண்பர் ஒருவர் வீட்டில் தேநீர் அருந்தும் போது அவரது மனைவி தேநீரில் பால் கலக்கவா அல்லது எலுமிச்சைபழமா என்று கேட்டார். ஏதோ யோசனையில் இரண்டும் என்று பெயின்மேன் பதில் சொல்லியிருக்கிறார். பாலில் எலுமிச்சை கலந்தால் திரிந்து போய்விடும் என்பதை மறந்து அவர் சொன்னதை கேட்டு வியப்படைந்த பெண் சொன்னது தான் Surely You're Joking, Mr. Feynman! . அதுவே அவரது புத்தகத்தின் தலைப்பாகியது. ஒரு முறை அவர் வழக்கமாக குடிக்கும் பார் இரவில் நெடுநேரம் திறந்து வைக்கபட்டிருக்கிறது. அங்கே சட்டஒழுங்கு பராமரிக்கபடவில்லை என்று மூடுவதற்கு கோர்ட் ஆணையிட்டது. கோர்டில் ஒரு குடிகாரன் என்ற முறையில் பெயின்மென் ஆஜராகி மதுவிடுதிகள் எளிய மக்களின் சந்திப்பு வெளி. அங்கே பேராசிரியர், லோக்கல் ஆள், படித்தவன் படிக்காதவன் அனைவரும் சமம். குடிப்பவர்கள் ஒருவர் சந்தோஷத்தை மற்றவருக்கு பகிர்ந்து தருகிறார்கள். ஆகவே அதை தடை செய்ய கூடாது. குடிப்பதற்கு நேரம் காலம் எதற்கு என்று வாதாடினார். முடிவில் அந்த கேஸ் வெற்றி பெற்று பார் மீண்டும் திறக்கபட்டதுஇப்படி பெயின்மேன் என்ற விஞ்ஞானி தான் நோபல் பரிசு பெற்றவன். மற்றவர்களை விட பெரிய புத்திசாலி என்பதை தூக்கி வைத்துவிட்டு வாழ்க்கையை கொண்டாடியிருக்கிறார். இதற்காகவே அவரை தேடித்தேடி வாசிக்கிறேன் என்று சொன்னேன்.

விடைபெறும் போது நண்பர் ரிச்சர்டு பெயின்மேன் வாழ்வினை பற்றி Infinity என்றொரு படம் வந்திருக்கிறது. அனுப்பி வைக்கிறேன். பாருங்கள் என்று சொல்லி போனார். பெயின்மேனின் படத்தை காண்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். இன்னொரு முறை பெயின்மேன் புத்தகத்தையும் படிக்க ஆர்வமாக இருந்தது. புத்தக குவியல்களுக்குள் எங்கேயிருக்கிறது என்று தேட வேண்டும். தேடும்போது தான் அதை யார் எடுத்து போயிருக்கிறார்கள். எங்கே என்ற விபரங்கள் நினைவிற்கு வரும் . உலகில் மிக சிரமமானது புத்தகங்களை காப்பாற்றி வைப்பது தான். ஆனாலும் புத்தகத்தின் விதியே அது இடம்மாறி போய்க்கொண்டேயிருப்பது தானே.

1 comment:

balaji said...

hi sir,

Nice information.
I have a collection of Feynman's lecture at caltech. also i have a book on his thesis about quantum theory.

Astrobalaji